“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் சரியாக செலவு செய்தலும் தான் சரியான அரசு என்பது அரசுக்கு பொருந்துமோ இல்லையோ தொழில் துறைக்கு மிகவும் பொருந்தும். இதனால்தான் திருவள்ளுவர் இந்த திருக்குறளை அறத்துப்பாலில் எழுதாமல் பொருட்பாலில் எழுதி உள்ளார் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், தொழிலில் சிறிதோ பெரிதோ எந்த நிலையில் இருந்தாலும் நாம் அனைவருக்கும் இருக்கும் பெரும் கனவு தொழில் வளர்ச்சி.
இந்த கனவு வளர்ச்சி என்பது என்ன? எது சரியான ஆக்கபூர்வமான வளர்ச்சி? வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தொழிலில் வளர்ச்சி என்றால் என்ன ?
நேற்றைய (அ) கடந்த கால அளவுக்கும், இன்றைய அளவுக்கும் (அ) நிகல்கால அளவுக்கும் உள்ள வேறுபாடு நன்றாக இருந்தால் வளர்ச்சி, நன்றாக இல்லை என்றால் சரிவு.
இந்த “நன்றாக” என்ற வார்த்தை எதை அளவிடுகிறோம் என்பதை பொருத்து கூடுவது வளர்ச்சியா, குறைவது வளர்ச்சியா என்பது மாறுபடுகிறது. உதாரணமாக நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை போன்ற அளவீடுகள் உயர்வது வளர்ச்சி. நிறுவனத்தின் செலவின அளவீடுகள் குறைவது வளர்ச்சி.
சரியான திட்டமிடலுடன், வளர்ச்சி அளவீடுகளை வரையறை செய்து, அதற்கான செயல்களை வேகப்படுத்துவதன் மூலமாகவோ, செயலுக்கான தடைகளை குறைப்பதன் மூலமாகவோ தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது தொழில் வளர்ச்சி என வரையறுக்கலாம்.
தொழில் வளர்ச்சி என்பது ஒரு நேர்கோடு அல்ல. மேடு பள்ளங்கள் நிறைந்த பயணம். வளர்ச்சி என்பது பயணத்துக்கான திசையே ஒழிய, பயணத்தின் இலக்கு அல்ல என்ற புரிதல் வேண்டும்.
தொழில் வளர்ச்சி & லாப வளர்ச்சி வேறுபாடு என்ன?
“வளர்ச்சி என்பது திசை. லாபம் என்பது ஒரு மைல்கல்.
வளர்ச்சி என்பது மனநிலை. லாபம் என்பது ஒரு எண்.
வளர்ச்சி என்பது பயணம். லாபம் என்பது இலக்கு.”
நாம் அனைவரும் பெரும்பாலும் நிகர லாபம் என்ற ஒற்றை அளவீட்டை மட்டும் வளர்ச்சி என்று கருதுகிறோம். இது ஒரு தவறான தொழில் கருத்தியல்.
“தொழில் வளர்ந்தால் லாபம் வளரும். லாபம் வளரும் எல்லா இடங்களிலும் தொழில் வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை”
நிகர லாபம், லாப வளர்ச்சி போன்றவை சார்பு (அ) வெளியீட்டு அளவீடுகள். இது போன்ற சார்பு அளவீடுகளை தனிப்பட்ட முறையில் கூட்டவோ குறைக்கவோ முடியாது. உள்ளீட்டு அளவுகளை மாற்றுவதன் மூலமாக இந்த வெளியீட்டு அளவுகள் தானாக மாறும்.
உற்பத்தி, விற்பனை, பணியாளர் எண்ணிக்கை, செலவீனங்கள் போன்றவை தனித்த உள்ளீட்டு அளவீடுகள். இவற்றை தனிப்பட்ட முறையில் கூட்ட, குறைக்க இயலும். இது போன்ற உள்ளீட்டு அளவீடுகளை மாற்றுவதன் மூலம், வெளியீட்டு அளவீடுகள் தானாக மாறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
லாப வளர்ச்சி மட்டும் தான் தொழில் வளர்ச்சி என்று கருதாமல், நாம் எடுக்கும் உள்ளீட்டு முடிவுகளின் வளர்ச்சி தான் தொழில் வளர்ச்சி, தொழில் வளர்ச்சியின் ஒரு வெளியீடு தான் லாப வளர்ச்சி. நீண்ட கால வெற்றிக்கு, சிறந்த தொழில்புரிவோர் எப்பொழுதும் உள்ளீட்டு அளவீடுகளை பொறுத்தே நிறுவனத்தை நடுத்துவர்.
என்னுடைய தொழில் என்னால் வளர்கிறதா ?
என்னுடைய தொழில் வளர்கிறதா இல்லையா என்பதை பின்வரும் 4-5 கேள்விகளை கேட்பதன் மூலம் மேலோட்டமாக புரிந்து கொள்ளலாம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ன?
நாட்டின் பணவீக்கம் என்ன?
எனது துறையின் ஆண்டு வளர்ச்சி என்ன?
எனது துறையில் விலைவாசி உயர்வு எப்படி உள்ளது?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10% என்னும் பொது நாமும் குறைந்தபட்சம் அந்த அளவுக்காவது வளர முயற்சி செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு ஈடான வளர்ச்சி என்பது, நாட்டின் பொருளாதாராம் வளர்வதனால் ஏற்படும் வளர்ச்சியாக கருதலாம். நீங்கள் புது முயற்சிகள் ஏதும் எடுக்காமல், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலைகளை தவறுகள் ஏதும் இன்றி செய்து கொண்டிக்கும் போது, பொருளாதாரம் வளரும் அளவுக்கு தானாகவே தொழில் வளர வேண்டும் என்பது பொருளாதாரம்,
நாட்டின் ஆண்டு சராசரி பணவீக்கம் 6-7% இருக்கும் பொது, நாம் தொழில் 6-7% வளர்ந்தால் நிகர தொழில் வளர்ச்சி என்பது 0% என்பது தான் பொருள். கடந்த ஆண்டு 10 கோடி விற்பனை செய்த நிறுவனம் இந்த ஆண்டு 10 கோடியே 60 லட்சம் விற்பனை செய்தால், நாட்டின் பணவீக்கம் 6% எனும் போது, அந்த நிறுவனம் வளர்ச்சி அடைய வில்லை என்பது பொருள். நிறுவனம் அடைந்த 60 லட்சம் விற்பனை வளர்ச்சி என்பது விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்பட்டதே தவிர தொழில் வளர்ந்ததால் வந்தது அல்ல. இது போன்ற சூழலில் ஆண்டு தொழில் வளர்ச்சி 6% க்கும் குறைவாக இருந்தால், தொழில் சரிந்து கொண்டு உள்ளது என்று பொருள்.
நிகர தொழில் வளர்ச்சி = தொழில் வளர்ச்சி - (பொருளாதார வளர்ச்சி + பணவீக்கம்)
கடந்த ஆண்டு விற்று முதல் = 10 கோடி
இந்த ஆண்டு விற்று முதல் = 12 கோடி
தொழில் வளர்ச்சி = 20%
நாட்டின் பொருளாதார வளர்ச்சி = 8%
நாட்டின் பண வீக்கம் = 5%
நிகர தொழில் வளர்ச்சி = 20-(8+5) = 7%
இதே கருத்தியல் துறை சார்ந்த ஆண்டு வளர்ச்சி மற்றும் துறை சார் பணவீக்கத்துக்கும் பொருந்தும். நிகர தொழில் வளர்ச்சி என்பது நாம் எடுக்கும் புது முயற்சிகளாலும், யுக்திகளாலும் வருவது.
என்னை பொறுத்த வரையில் வளர்ச்சி என்பது வளர்ச்சி. அது என்னால் நடந்தாலும், சூழநிலைகளால் நடந்தாலும் ஒன்றுதான். ஆனால் தொழில் வளர்ச்சிக்கும், நிகர தொழில் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகள் தொழில் முனைவோருக்கு தெரியும் போது தொழிலை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க இயலும்.
தொழில் வளர்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் தேவை என்ன?
பொருளாதார சூழல்கள் விரைவாக மாறி, மாறி நிலைத்தன்மை என்ற ஒன்றே இல்லாத அளவுக்கு வந்துள்ளது. பண வீக்க விகிதமானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்த மாறி வரும் நிலையற்ற பொருளாதார சூழலை எதிர் கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு தொழிலை வளர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தொழில்நுட்ப வளர்ச்சியானது முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பல தொழில்களை புரட்டி போட்டு கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புது புது தொழில்நுட்பங்கள் வெளிவந்து, தொழிலை எளிமை படுத்தி கொண்டிருக்கின்றன. தன்னை தானே தகவமைத்து, வளராத நிறுவனங்கள் தொழில் நுட்ப புரட்சியில் காணாமல் போகின்றன. தகவல் தொழில் நுட்ப புரட்சியோடு இணைந்து வளர பழக வேண்டும்.
“வாய்ப்பு என்பது உலகமயம். போட்டி என்பதும் உலகமயம். உலகமயமாக்கல் ஒரு இரு முனை கத்தியாக மாறி வருகிறது”.
ஓரு புறம் உலகெங்கும் தொழில் செய்ய முடியும் என்ற வாய்ப்பு இருந்தாலும் மறுபுறம் உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் நம் வீட்டு வரை வந்து விற்பனை செய்ய கூடிய வாய்ப்பும் அமைந்துள்ளது. உலகமயமாக்கலை சமாளிக்க தொழிலை வளர்க்க வேண்டிய நிலை உள்ளது.
வாடிக்கையாளரை திருப்தி படுத்த, செலவீனங்களை குறைக்க, பொருளின் அலகு பொருளாதாரத்தை மேம்படுத்த, உற்பத்தி திறனை அதிகரிக்க, புதிய தொழில் முதலீடுகளை கொண்டுவர, புதிய தொழில் நுட்பங்களை அறிமுக படுத்திட, போட்டியினை சமாளிக்க, திறமையான பணியாளர்களை நல்ல சம்பளத்தில் பணி அமர்த்திட, சந்தை சரிவுகளை சமாளிக்க, பேரிடர் காலங்களை சமாளித்து கடந்து வர, தொழிலை விரிவு படுத்த என அத்தனைக்குமான ஒரே மாத்திரை “தொழில் வளர்ச்சி”.
ஆக்கபூர்வமான தொழில் வளர்ச்சி என்றால் என்ன ?
வளர்ச்சிக்கான முயற்சி என்பது வெற்றியும் தோல்வியும் கலந்து இருப்பது. ஆனால் வளர்ச்சிக்கு துணிச்சல் வேண்டும் என்ற பெயரில் கண்மூடித்தனமாக, விளைவுகளை ஆராயாமல், அதிர்ஷ்டத்தை நம்பி, வென்றால் என செயல் தோற்றால் காலத்தின் செயல் என்று, கடவுளின் மேல் பழியை போட்டு செயல்படுத்தப்படும் முடிவுகள் நிறுவனத்தை அழிவுப்பாதையில் எடுத்து செல்லும். இவ்வாறான முடிவுகள் ஒரு முறையோ, ஒரு இடத்திலோ, ஒரு கால அளவிலோ வெற்றி பெற்றாலும் கூட, நீடித்த முறையில் இது போன்ற முடிவுகளை பெரிதாக்குவது நடக்காத காரியம்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முடிவுகள் வெற்றி பெற்றால் கிடைக்கும் சாதக அம்சங்களையும், தோல்வி அடைந்தால் கிடைக்கும் பாதக அம்சங்களையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து, அந்த முடிவுகள் செயல்படுத்தப் படும் செயல் முறைகளை வரையறுத்து, வெற்றி தோல்விகளின் விளைவை கணக்கிட்டு, வென்றால் பெற்ற வெற்றியை பெருக்குவதற்கான வழிமுறைகளோடும், தோற்றால் எங்கு எதனால் தோல்வி நடந்தது, சரி செய்ய வேண்டிய இடம் எது, கற்று கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதற்கான தெளிவான திட்டமிடலுடனும் எடுக்கபடும் முடிவுகள் ஆக்கபூர்வ வளர்ச்சியை கொடுக்கும்.
ஆக்கபூர்வ வளர்ச்சி என்பது நீடித்த, நீண்ட கால, ஒருங்கிணைந்த வளர்ச்சி. ஒருங்கிணைத்த என்பது நிறுவனத்தின் அனைத்து துறைகளும் வளர்வது. வளர்ச்சிக்கான முடிவு என்பது ஒரு துறையால் (அ) ஒரு தனி நபரால் தொடங்கபட்டால் கூட, ஒரு துறை மட்டுமே சார்ந்த பொறுப்பு அல்ல. விற்பனை துறை மட்டும் வளர்ந்து, உற்பத்தியும், தரக்கட்டுபாட்டு துறையும் ஈடு கொடுக்க முடியாமல் போனாலும் தொழிலில் சரிவு ஏற்படும்.
தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடல் எங்கிருந்து தொடங்குவது?
பல வழிகளில் தொழில் வளர்ச்சியை திட்டமிட முடியும். திட்டமிடல் வேண்டும் என்பதுதான் நோக்கமே ஒழிய, வழி எது என்பது செய்யும் தொழிலின் தன்மை, நிறுவனரின் வளர்ச்சி நோக்கம், நிதி, மனிதவள மற்றும் இதர ஆதராங்கள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டியது.
வளர்ச்சி சார்ந்த திட்டமிடல் என்பது இரண்டு பெரிய பிரிவுகளை கொண்டது.
பொருள் சார் வளர்ச்சி – இப்பொழுது இருக்கும் பொருள் என்ன? எதிர்கால பொருட்கள் என்ன ?
சந்தை சார் வளர்ச்சி – இப்பொழுது எங்கே விற்பனை செய்கிறோம்? எதிர்காலத்தில் எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்?
மேலே உள்ள இரண்டு பிரிவுகளை பொருத்து தொழில் வளர்ச்சிக்காக, நான்கு வகை திட்டங்களை வகுக்கலாம்.
சந்தையை ஆழமாக்கல் – ஏற்கனவே இருக்கும் பொருள். ஏற்கனவே இருக்கும் சந்தை. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர் போல அதிக வாடிகக்கையாளரை பெறுவதன் மூலம் இருக்கும் சந்தையில் நம் பங்கினை அதிக படுத்துதல்.
சந்தையை விரிவுபடுத்துதல் – ஏற்கனவே இருக்கும் பொருள். வேறு சந்தை. வேறு வாடிக்கையாளர். புதிய கடைகளை திறப்பதன் மூலம் வாடிக்கையாளரை அதிக படுத்துதல்.
புதிய பொருட்களை அறிமுகபடுத்துதல் – புதிய பொருட்களை ஏற்கனவே இருக்கும் சந்தையில் அறிமுக படுத்துவதன் மூலம் வாடிக்கையாளரை அதிக படுத்துதல்.
திசை மாற்றுதல் – புதிய பொருள். புதிய சந்தை. புதிய வாடிக்கையாளர். திசை மாற்றும் முடிவுகள் அதிக ஆபத்தானவை. கவனமாக கையாள பட வேண்டியவை. இது வளர்ச்சிக்கான முடிவு என்பதை விட புதிய தொழிலுக்கு சமமானது.
ஒவ்வொரு வகையின் பலம், பலவீனங்கள், வாய்ப்புகள், சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து நம் தொழிலுக்கும், நமக்கும், நடைமுறைக்கும் உகந்த வகையினை தேர்வு செய்வதன் மூலம் வளர்ச்சிக்கான முதல் படியை எடுத்து வைக்கலாம்.
பெரிய முடிவுகள் மட்டும்தான் தொழில் வளர்ச்சியா?
தொழிலில் வளர்ச்சி என்பது ஒரு புறம் பெரிய பெரிய முடிவுகள் என்றாலும் மறுபுறம் வாடிக்கையாளரை நாம் எடுக்கும் சிறு சிறு முடிவுகள். இந்த சிறு முடிவுகள் கூட்டு வட்டி போன்றது. கீழே உள்ள கணக்கை கவனியுங்கள். 0.01 என்ற ஒரு சிறு மாற்றம், கூட்டு வட்டியாக 365 நாட்கள் செய்யும்போது ஏற்படும் மாற்றம் எவ்வளவு பெரியது என்பதை உணர்த்தும்.
0.99^365 = 0.026
1.00^365 = 1
1.01^365 = 37.78
நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், சிறு சிறு முன்னேற்றங்களும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சென்றடையும். இது போன்ற சின்ன சின்ன முன்னேற்றங்கள் சந்தையில் போட்டியாளரிடம் இருந்து நம்மை வேறுபடுத்தும். இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளரை நம்மை நோக்கி கொண்டு வரும்.
இந்த சிறு சிறு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் சந்தையில் உங்களை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும். தொழில் இந்த சிறு சிறு முடிவுகளின் முக்கியதுவத்தை உணர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
வளர்ச்சி திட்டங்களை எவ்வாறு நடைமுறை படுத்துவது ?
ஒவ்வொரு தொழிலும் ஒரு வகை. மேலே கூறிய வகைகளில் எது நமக்கு உகந்தது என்று முடிவு செய்த பின்னர், அதை எவ்வாறு நடைமுறை படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
தொழிலுக்கு ஏற்ற நிறுவனங்களை கையக படுத்துதல், ஏற்ற நிறுவனங்களோடு சேர்ந்து செயல்படுதல், சொந்தமாக புதிய குழுவை அமைத்து விரிவாக்கம் செய்தல், ஒப்பந்த அடிப்படையில் விற்பனை உரிமம், முகவர் உரிமம், கடை நடத்தும் உரிமம் போன்றவற்றை வழங்குதல், நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்துதல் போன்றவற்றை நன்கு ஆய்ந்து நிறுவனத்துக்கு ஏற்ற ஒரு திட்டத்தையோ, ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களையோ தேர்ந்தெடுத்து நடைமுறை படுத்தலாம். இந்த திட்டங்களை உங்கள் நிறுவனத்துக்கு தேர்ந்தெடுக்கும் போது பின்வரும் தகவல்களை நினைவில் கொள்ளுங்கள்.
வளர்ச்சிக்கான குறிக்கோளை நிர்ணயம் செய்யுங்கள் – குறிக்கோள் இல்லாத வளர்ச்சி திசையற்று திரியும் படகு போல ஆகும். குறிக்கோளின் அடிப்படையிலையே வளர்ச்சிக்கான திட்டமிடல், இலக்குகளை நிர்ணயம் செய்தல், இலக்குகளை அடையும் வழிகளையும், செயல் முறைகளையும், திட்டங்களையும் வகுத்தல், ஆதாரங்களை திட்டமிட்டு தயார் செய்தல் போன்றவை அமையும்.
உங்கள் வாடிக்கையாளரை குழுவாக வகைப்படுத்துங்கள் – வயது, வருமானம், தொழில், பாலினம், வசிக்கும் பகுதி போன்ற காரணிகளை கொண்டு, நாம் நிறுவனத்துக்கான சரியான வாடிக்கையாளர் என்பவர் யார், அவர் எவ்வாறு இருப்பார் என்று உருவகப்படுத்துங்கள். உங்கள் நிறுவனம், நுகர்வோரோடு இல்லாமல், நிறுவனத்தோடு தொழில் செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர் நிறுவனத்தின் வருவாய், பணியாளர் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் உருவகம் செய்யுங்கள்.
விற்பனை வாய்ப்புள்ள வாடிக்கையாளரின் தரவுதளத்தை உண்டாக்குங்கள் – விற்பனை வளர்ச்சிக்கு சரியான தரவுதளம் அவசியம். சந்தை படுத்தும் யுக்திகளான இணைய சந்தைபடுத்தல், கண் காட்சிகள், விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் சிறப்பான வாடிக்கையாளர் தரவு தளம் உண்டாக்குங்கள்.
வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற திட்டமிடுங்கள் - உங்களை பொறுத்த வரை வளர்ச்சி. வாடிக்கையாளர் பொறுத்த வரையில் தரம் & சேவை மீதான நம்பிக்கை. வளர்ச்சியை நோக்கி ஒடும்போது பொருளின் தரத்திலோ, வழங்கும் சேவையிலோ தொய்வு ஏற்பட்டு, வாடிக்கையாளரை இழக்கும் நிலை என்பது ஓட்டை வாளியில் நீர் நிரப்புதலை போன்றது. எவ்வளவு நீர் ஊற்றினாலும் வீணாகும். அதுபோல எவ்வளவு புதிய வாடிக்கையாளர் வந்தாலும், தக்க வைக்க முடியாத நிலை இருக்கும். ஒரு புதிய வாடிக்கையாளரை பெறுவதை விட, இருக்கும் வாடிக்கையாளரிடம் நம்பிக்கையை தக்க வைத்தல் மிக அவசியம்.
வளர்ச்சிக்கான குறுக்குவழி என்ன ?
திட்டங்களை முனைப்புடனும், நம்பிக்கையுடனும் செயல் படுத்துவதும், செயல் படுத்தும் வரும் நடைமுறை சிக்கல்களையும், பின்னடைவுகளையும் படிக்கல்களாக மாற்றுவதுமே குறுக்குவழி ஆகும். இதில் இருக்கும் எந்த ஒரு படியையும் விட்டுவிட்டு நிலையான நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது. சரியான திட்டமிடலுடன் வேகமாக செல்லலாம். ஆனால் தவிர்த்து விட்டு செல்ல முடியாது.
உடனடியான வெற்றி என்பது நீடித்த வெற்றி என்று பொருள் கொள்ள முடியாது. துறை வல்லுனர் அனுபவங்களின் மூலமும், ஆலோசகர்களின் மூலமும் திட்டமிடலை தெளிவாக்கலாம். ஆனால் செய்து பார்த்து பெரும் அனுபவமே வளர்ச்சிக்கு சிறந்த ஆசான்.
முடிவுகளையும், எண்களையும் மையப்படுத்தாமல், சரியான கேள்விகளையும் பரிசோதனைகளையும், கற்றலையும், முயற்சி செய்வதையும், தோல்விகளுக்கு பலிகடாக்களையும், வெற்றிகளுக்கு விளம்பரங்களையும் தேடாமல் பொருப்புகளை சுமந்து வேகமாக தகவமைத்து மீண்டு வருவதையும் மையப்படுத்துவது வளர்ச்சிக்கான குறுக்கு வழி.
பகுதி 2 – அடுத்த வாரம்
ஆக்கபூர்வமான தொழில் வளர்ச்சிக்கு
- மனநிலையை விரிவாக்கம் செய்வது எப்படி?
- பொருளை விரிவாக்கம் செய்வது எப்படி?
- பணியாளர்களை விரிவாக்கம் செய்வது எப்படி?
- செயல் முறைகளை விரிவாக்கம் செய்வது எப்படி?
- நிதி மற்றும் பொருளாதாரதை விரிவாக்கம் செய்வது எப்படி?
- வாடிக்கையாளரை விரிவாக்கும் செய்யும் வழிகள் என்ன?
- என் நிறுவன விரிவாக்க மாதிரி உண்டாக்குவது எப்படி?
என்பது குறித்து எழுதுகிறேன்.